

திருச்சிராப்பள்ளி:
(கட்டற்ற கலைக்களைஞ்சிமான விக்கிப்பீடியாவில் இருந்து)
திருச்சிராப்பள்ளி (ஆங்கிலம்:Tiruchirappalli), இந்தியாவின் தமிழ்நாடுமாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள 4 முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி காவேரி நதிக் கரையில் அமைந்துள்ளது. பொதுவாக திருச்சிராப்பள்ளியை, திருச்சி என்று அழைப்பார்கள்.
திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) - பள்ளி, அதாவது சிராய் பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்த பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. தமிழகத்தின் மையப்பகுதியில் இருப்பதால் இது ஒரு வர்த்தக மையமாகவும் திகழ்கிறது.
பெயர் காரணம்
திரிசிரன் என்னும் அரக்கன் மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டு கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் சிரா என்னும் சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்கு பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.
ஆறுகள்
திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. கல்லணையும் மேலணையும் இம்மாவட்டத்தின் புராதன அணைக் கட்டுகளாகும். திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக் கொண்டான் ஆறு திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.
அணைகள்
கல்லணை சோழ மன்னன் கரிகாலனால் கட்டப் பெற்றது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமுமாகும்.
மேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டு படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வெள்ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment